LATEST NEWS
“தவெக மாநாட்டில் பறந்த புறா…!” விஜய்க்கு வந்த புதிய சிக்கல் புறா விவகாரத்தில் பீட்டா போட்ட அதிரடி புகார்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தனது கட்சியின் கொடி வண்ணங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் பூசப்பட்ட ஒரு புறாவைப் பறக்கவிட்டார். இந்தச் செயல் சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், விலங்கு நல அமைப்பான PETA இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பறவைகளின் சிறகுகளில் பெயிண்ட் போன்ற ரசாயனங்களைப் பூசுவது அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதோடு, இது ஒரு விலங்கு வதை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புறாக்களின் சிறகுகளில் வண்ணம் பூசுவதால் அவற்றின் பறக்கும் திறன் பாதிக்கப்படும் என்றும், இயற்கையான நிறம் மறைக்கப்படுவதால் பருந்து போன்ற வேட்டையாடும் பறவைகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியாமல் அவை உயிரிழக்க நேரிடும் என்றும் பெட்டா அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், ரசாயனங்கள் கலந்த பெயிண்ட்டை பறவைகள் தங்கள் அலகால் கோதும் போது, அவை நச்சுத்தன்மையுடன் உடலுக்குள் சென்று உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதும் அவர்களின் முக்கிய வாதமாக உள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களில் உயிருள்ள விலங்குகள் மற்றும் பறவைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதை பெட்டா சுட்டிக்காட்டியுள்ளது. அரசியல் தலைவர்கள் தங்களின் பலத்தைக் காட்ட இது போன்ற உயிரினங்களை ‘வாழும் பேனர்களாக’ பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், இது குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
