LATEST NEWS
தினமும் ஒரு பேட்டி ஏன்..? மறைமுகத் தாக்குதலா..? மாஸ் எச்சரிக்கையா..? திருமாவளவனை நோக்கி திரும்பிய வைகோவின் அம்பு..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்டதாலேயே அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், திமுகவுடன் தொடர்ந்து நட்பில் இருப்பதாகவும்’ சமீபத்தில் பேசியிருந்தார். அவரின் இந்த முன்னுக்குப் பின் முரணான பேட்டிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. இந்தச் சூழலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, திருமாவளவனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “கூட்டணியில் இருந்து கொண்டே தினம் ஒரு பேட்டி கொடுத்து பொதுவெளியில் ஆட்சியை விமர்சிப்பது ஏன்?” என மறைமுகமாகச் சாடிப் பேசியுள்ளார்.
அரசியல் கூட்டணி மற்றும் விசுவாசம் குறித்துப் பேசிய வைகோ, தான் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அதற்கு முழு விசுவாசத்துடன் செயல்படுபவன் என்றும், சில விஷயங்களைக் கூட்டணி தர்மத்திற்காக சகித்துக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது தவெக கூட்டணியில் இருக்கும் தான், இந்த அரசில் ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாகச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமோ அல்லது நேரடியாக முதலமைச்சர் விஜய்யிடமோ தொலைபேசி வாயிலாகத் தெரிவிப்பேனே தவிர, கூட்டணியில் இருந்துகொண்டே பொதுவெளியில் வந்து அரசை ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், தற்போதைய தவெக அரசு இன்னும் 5 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று சிலர் சாபம் விட்டுக் கொண்டிருப்பதாக ஆவேசமடைந்த வைகோ, தவெக அரசை யாராலும் எளிதில் கவிழ்க்க முடியாது என்றார். அரசியல் சூழ்ச்சிகள் மூலம் இந்த அரசை கவிழ்த்தால், அடுத்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 180 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றும் எச்சரித்தார். அதோடு, மாநில அரசுகளைக் கலைக்கப் பயன்படும் அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவுக்கு எதிராகத் திமுகவின் கடந்தகாலப் போராட்டங்களையும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி வைகோ தனது உரையில் விரிவாகப் பேசியுள்ளார்.
