LATEST NEWS
கேள்வி கேட்ட அமைச்சர்… கிளம்பிய சர்ச்சை… பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..! பின்னணியில் நடந்தது என்ன..?!
அமைச்சர் கீர்த்தனா சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விதம் மற்றும் ஆசிரியரிடம் அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கு விளக்கமளித்த அமைச்சர் கீர்த்தனா, தான் தமிழ் வழிக் கல்வியில் படித்தவள் என்றும், மாணவியை தான் கேலி செய்ததாகப் பொய்யான கதைகளைப் பரப்புகிறார்கள் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்வது என்பது வழக்கமான ஒரு மரபுதான் என்று சுட்டிக்காட்டினார். எனவே, அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதை யாரும் தவறாகப் புரிந்துகொள்ளவோ அல்லது தவறான கண்ணோட்டத்துடன் எடுத்துக்கொள்ளவோ வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அந்த ஆய்வின்போது அமைச்சர் கீர்த்தனா ஒரு தங்கை அல்லது அக்கா என்ற ‘சகோதரி ஸ்தானத்தில்’ இருந்துதான் அங்கிருந்தவர்களிடம் பேசினார் என்று அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு தெரிவித்தார். தமிழ் வழியில் படித்து இன்று ஆங்கிலத்தில் சிறந்த தனித்திறமையையும், அரசியல் ஆளுமையையும் வளர்த்துக்கொண்டுள்ள அமைச்சர் கீர்த்தனா குறித்து அங்கிருந்தவர்கள் எடுத்த காணொளிதான் தற்போது தேவையற்ற சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
