LATEST NEWS
“எல்லாம் சீட் ஆசைதான்!”.. வைகோ மனதில் இருந்த அந்த வெறி வெட்டவெளிச்சம்.. மல்லை சத்யா உடைத்த ரகசியம்.. அதிரும் அரசியல் களம்..!!
முன்னாள் மதிமுக நிர்வாகி மல்லை சத்யா முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளின்படி, திமுகவிலிருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கியதன் பின்னணியில் கொள்கை முரண்பாடுகளை விட, திமுகவின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது நிறைவேறாத அதிகார ஆசையே முக்கியக் காரணமாக இருந்துள்ளது. கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் தலைவராக வரலாம் என்று வைகோ எதிர்பார்த்ததாகவும், அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலில்தான் திமுகவை அரசியல் ரீதியாக அழிக்க வேண்டும் என்ற நோக்கோடு அவர் மதிமுகவை உருவாக்கினார் என்றும், ஆனால் 1996 பேரவைத் தேர்தலிலேயே அவரது அந்த அரசியல் கணக்குகள் தோற்றுப்போனதாகவும் சத்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், மதிமுக தொண்டர்களின் கொள்கைப் பற்றைப் பயன்படுத்தி வைகோ சுயநல அரசியல் நடத்தியதாக விமர்சித்துள்ள அவர், தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்தமாகத் திமுக பக்கமே திரும்புவார்கள் என்பதை நன்கறிந்திருந்த காரணத்தாலேயே, அதைத் தடுப்பதற்காக திமுக ஆட்சியில் இருக்கும் வரை அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறக் கூடாது என்பதில் வைகோ பிடிவாதமாக இருந்தார் என்றும் சாடியுள்ளார்.
2021 தேர்தலின் போது மதிமுகவினர் 6 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை “அரசியல் தேவைக்காகத் தங்களை வாடகைக்கு விட்டுச் சென்ற நிகழ்வு” என்று அவர் ஒப்பிட்டுள்ளார். அதோடு, மதிமுகவிலிருந்து அதிருப்தியடைந்து வெளியேறும் நிர்வாகிகளைத் திமுகவில் சேர்க்கக் கூடாது என வைகோ நேரடியாக அறிவாலயத்திற்கே சென்று தடுத்ததாகவும் புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். துரை வைகோவின் திடீர் அரசியல் வருகை மற்றும் மதிமுகவில் நடந்த உட்கட்சி ஜனநாயகப் படுகொலை குறித்தும் மல்லை சத்யா மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். வாரிசு அரசியலை முதன்மைக் கொள்கையாக எதிர்த்து உருவான மதிமுகவில், 50 வயதைக் கடந்த தனது மகனைத் திடீரென வைகோ உள்ளே கொண்டு வந்ததன் மூலம் தனது சொந்தக் கொள்கையையே உடைத்துவிட்டார் என்று சாடியுள்ளார். மு.க.ஸ்டாலின் வாரிசு அரசியல் மூலம் வந்தவர் என்று வைகோ விமர்சித்தாலும், ஸ்டாலின் சிறுவயது முதலே அடிமட்டத் தொண்டனாகப் பணியாற்றி நீண்ட பயணத்திற்குப் பிறகே இந்த இடத்திற்கு வந்தார்; ஆனால் துரை வைகோவிற்குக் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தியதில் எந்தவித முன்னறிவிப்போ, ஜனநாயக நடைமுறையோ பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சந்தர்ப்பவாத அரசியல் நகர்வுகளால்தான் கட்சியின் மூத்த முன்னோடிகள் வைகோவின் உண்மை முகத்தைப் புரிந்து கொண்டு விலகியதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
