CINEMA
: வெற்றிமாறன் கொடுத்த செக்மேட்…!திரையரங்குகளை தெறிக்கவிட வரும் சிம்பு – விஜய் சேதுபதி காம்போ…!தீபாவளி ரேஸில் சிம்புவுடன் நேருக்கு நேர் மோதும் தனுஷ்! கோலிவுட்டில் மீண்டும் தொடங்கிய ‘ஸ்டார் வார்’…!
தமிழ் திரையுலகில் மிகக் குறைந்த படங்களையே இயக்கியிருந்தாலும், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இயக்குநர் வெற்றிமாறனுக்கு உண்டு. இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, மற்றும் விமர்சனங்களைச் சந்தித்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘வடசென்னை’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கடைசியாக வெளியான ‘விடுதலை 2’ திரைப்படத்தின் ஓரளவான வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது சிம்பு மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ‘அரசன்’ திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இடையில் வேல்ஸ் நிறுவனத்துடனான சில மனஸ்தாபங்களால் படப்பிடிப்பு தடைபட்டிருந்தாலும், தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ‘அரசன்’ திரைப்படத்தை, எப்படியாவது இந்த வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றனர். சிம்பு மற்றும் விஜய் சேதுபதியின் காம்பினேஷன் காட்சிகள் திரையில் மிகவும் அட்டகாசமாக வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீபாவளி ரேஸில் இந்த படத்துடன் மோதப்போகும் மற்ற படங்களின் தகவல்களும் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.
அதன்படி, தீபாவளி ரிலீஸாக வரவிருக்கும் ‘அரசன்’ படத்திற்குப் போட்டியாக தனுஷின் ‘D 55’ மற்றும் கார்த்தியின் நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் களமிறக்க அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ரஜினி-கமல், விஜய்-அஜித் ஆகியோருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சிம்பு-தனுஷ் இடையேயான பாக்ஸ் ஆபீஸ் போட்டி எப்போதும் ரசிகர்களிடம் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தும். கடந்த சில வருடங்களாக ஓய்ந்திருந்த இந்த ஸ்டார் வார், இந்த தீபாவளிப் பண்டிகைக்கு மீண்டும் உயிர்பெற வாய்ப்புள்ளதால், இதில் யாருடைய படம் அதிக வசூலைக் குவித்து சாதனை படைக்கப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
