LATEST NEWS
“10 ரூபாய் எக்ஸ்ட்ரா தர முடியாது…” டாஸ்மாக் கடையில் ஊழியரைச் செருப்பால் அடித்த முதியவர்… பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டம் பூலாவரி அடுத்துள்ள ஆத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்), மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று இக்கடையில் வழக்கத்தை விடக் குடிகாரர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனக்குத் தேவையான ஒரு மதுபாட்டிலை வாங்கியுள்ளார்.
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டத்தின் கீழ், அதற்கான பத்து ரூபாய் கட்டண ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து பாட்டிலில் ஒட்டிய ஊழியர் பற்குணன், முதியவரிடம் கூடுதல் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால், பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள நூற்றி நாற்பது ரூபாயை மட்டுமே கொடுப்பேன் என்றும், உத்திவாதத் தொகையான கூடுதல் பத்து ரூபாயைத் தர முடியாது என்றும் கூறி அந்த முதியவர் ஊழியருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதல் திடீரென முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த முதியவர் தான் காலில் அணிந்திருந்த காலணியைக் (செருப்பு) கழற்றி, விற்பனையாளர் பற்குணத்தை ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது. இக்கொடூரச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள், உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்திச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பொது இடத்தில் முதியவர் ஒருவர் அரசு டாஸ்மாக் ஊழியரைச் செருப்பால் தாக்கும் இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், அரசுப் பணியாளரைத் தாக்கிய முதியவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
