LATEST NEWS
அங்க சிறுநீர் கழிக்காதீங்கனு சொன்னது தப்பா…”உன்னை உயிரோடு விடமாட்டோம்…” தட்டிக்கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…பெட்ரோல் பங்க்கை தரைமட்டமாக்கிய கஞ்சா கும்பல்…தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கஞ்சா கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி, அலுவலகத்தை அடித்து நொறுக்கிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் உள்ள அரசடி பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு, நேற்று மாலை ஐந்து மணி அளவில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் எரிபொருள் நிரப்ப வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒரு நபர், அங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்தாமல், வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு அருகிலேயே பகிரங்கமாகச் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர், பொது இடத்தில் இப்படிச் செய்யக் கூடாது என சத்தம் போட்டு தட்டிக் கேட்டுள்ளார்.
ஊழியர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், “எங்களிடமே தகராறு செய்கிறாயா? உன்னை உயிரோடு விடமாட்டோம்” என்று மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆனால், இத்துடன் இந்த மோதல் முடிவுக்கு வரவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த அந்த நபர்கள், மேலும் 10 பேர் கொண்ட ஒரு ரவுடி கும்பலைத் திரட்டிக்கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் மீண்டும் அந்த பெட்ரோல் பங்க்கிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த போதை கும்பல், பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கட்டை, கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது. மேலும், அங்கிருந்த பெட்ரோல் பங்க் அலுவலகத்தின் கண்ணாடிகள் மற்றும் உபகரணங்களையும் அடித்து உடைத்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இக்கோரத் தாக்குதலில் காயமடைந்த ஊழியர் சவுரவ் இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதன் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
