LATEST NEWS
அரசு ஊழியர்களே அலர்ட்…! நாளை முதல் புதிய ரூல்ஸ்… தலைமைச் செயலக ஊழியர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்ட ‘முக அடையாள’ பயோமெட்ரிக் முறை…!!
சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் மனிதவள மேலாண்மைத்துறை பணியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட விரல் ரேகை மூலமான ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு முறைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், தற்போது அத்துறையின் முதன்மைச் செயலாளரின் ஆலோசனையின் பேரில், ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து (நாளை முதல்) புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன்கூடிய ‘முக அடையாள அங்கீகார’ (Face Recognition) பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டு முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறையின் துணைச் செயலாளர் தங்கபாப்பா வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் தங்களின் வருகையை உரிய நேரத்தில் உறுதி செய்ய வேண்டும். அதன்படி, தினந்தோறும் காலை 10 மணிக்குள் பணிக்கு வருகை தந்து, இந்த முக அடையாளப் பதிவேட்டு முறையில் தங்களது வருகையைப் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மின்னணுப் பதிவுடன் வழக்கமான வருகைப் பதிவேட்டிலும் தங்களின் கையொப்பத்தை இட வேண்டும் என்றும், அலுவலக நேரத்தில் அனைத்துப் பணியாளர்களும் தங்களது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைத் தவறாமல் அணிந்திருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
