நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததைத் தொடர்ந்து, கட்சியில் மீண்டும் கடுமையான உள்கட்சி மோதல் வெடித்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் ஒரு அணியினர் போர்கொடி தூக்கினர். சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இபிஎஸ்ஸின் உத்தரவை மீறி, வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வெளியில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததால், அவர்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
இதற்கிடையே, தவெகவில் எதிர்பார்த்த முக்கியப் பதவிகள் கிடைக்காத நிலையில், வேலுமணி தரப்பினர் மீண்டும் இபிஎஸ்ஸுடன் சமரச நிலையை எட்டினர். இதனைத் தொடர்ந்து, கட்சியில் மீண்டும் இணைந்த நிர்வாகிகளுக்கு இபிஎஸ் புதிய பொறுப்புகளை அறிவித்தார். அதன்படி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், முன்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்வாக்குமிக்க மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்படவில்லை.
தற்போது இபிஎஸ் வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லை என்று கூறி எஸ்.பி. வேலுமணி மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கோவையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், “என்னை நம்பி வந்த 30 மாவட்டத் தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படாதபோது, நான் மட்டும் எப்படி இந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்றும், தொண்டனாகவே பயணிக்கத் தயார் என்றும் கூறி இபிஎஸ் தலைமைக்கு எதிராக மீண்டும் அவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.