LATEST NEWS
திமுகவுக்கு நோ… விஜய்க்கு எஸ்…! தவெக-வில் ஊழல் இருக்காது… திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்…! கூட்டணியை முறித்த கையோடு வைகோ அதிரடி அட்டாக்..!!!
செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் “கமிஷன், கட்டிங், கரப்ஷன்”என அனைத்தும் மலிந்து காணப்பட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, நிலப் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு சதுர அடி நிலப் பதிவுக்குக் கூட லஞ்சம் வாங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் ஊழல் நிறைந்துள்ளதாகத் தெரிவித்தார். சமீபத்தில் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் திமுக அரசுக்கு எதிராக இந்த விமர்சனங்களை வைத்துள்ளார்.
வைகோவின் இந்த திடீர் விமர்சனத்தை அடுத்து, அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், “இத்தனை காலம் திமுக கூட்டணியில் இருந்தபோது இந்த ஊழல்களைப் பற்றி ஏன் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் கடுமையான கோபமடைந்த வைகோ, “கூட்டணியில் இருக்கும்போது அந்தத் தலைமையை விமரிசிப்பது அரசியல் தர்மமும் நாகரீகமும் கிடையாது; அது அயோக்கியத்தனம்” என்று பதிலளித்தார். மேலும், கேள்வி கேட்ட செய்தியாளர் திமுக ஆதரவு ஊடகத்தைச் சேர்ந்தவரா எனக் கேட்டு அவருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வைகோவுடன் இருந்த மதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கேள்வி கேட்ட செய்தியாளரைத் தாக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, மதிமுகவினரையும் செய்தியாளர்களையும் தனித்தனியாகப் பிரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தவெக கட்சிக்கு ஆதரவாகவும், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் நிர்வாகத்தில் ஊழல் இருக்காது என்றும் வைகோ இந்த சந்திப்பின் போது பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
