CRIME
கன்னியாகுமரியில் அதிர்ச்சி.! ஆசிரியை குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்து… வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை.. லட்சக்கணக்கில் பணம் பறிப்பு: பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை..!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் குளிப்பதை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்ற நபர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி ஜெயகாந்தனும், அவனது நண்பரான ஜெகனும் இணைந்து ஆசிரியை மிரட்டியுள்ளனர். மேலும், அந்த ரகசிய பதிவை வைத்து ஆசிரியையிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, அவரிடமிருந்து பெருந்தொகையையும் பறித்து வந்துள்ளனர்.
இந்த தொடர் மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லைகளால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆசிரியை, தமக்கு நீதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற கிளையின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தக்கலை பகுதி காவல்துறை அதிகாரிகள் ஜெயகாந்தன் மற்றும் ஜெகன் ஆகிய இருவர் மீதும் பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடும் பணியிலும், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
