CRIME
“என் மகனை மீட்டுத் தாருங்கள்..!” இளைஞரைத் தாக்கிப் பணம் பறித்த போலீசார்..! 2 நாட்களாகக் காணாமல் போன சோகம்..! காவல்நிலையத்தில் நடந்த கொடூரம் குறித்து ஆட்சியரிடம் தந்தை கதறல்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில், காவல்துறையினர் ஒரு இளைஞரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரான தீபக் ராயின் தந்தை சந்திரிகா ராய் அளித்த புகாரின்படி, ஜூலை 17 அன்று தேனீர் கடையில் அமர்ந்திருந்த அவரது மகனை கோடேகாவ் காவல் நிலைய அதிகாரி மற்றும் காவலர்கள் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர், காவல் நிலையத்திற்குப் பின்னால் சிசிடிவி கண்காணிப்பு இல்லாத பழைய அறையில் அடைத்து வைத்து அவரைத் தாக்கியதுடன், அவரிடமிருந்த ரூ.17,000 ரொக்கம் மற்றும் கைப்பேசியையும் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் தீபக் ராயை விடுவிக்க ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், வெற்றுப் பத்திரங்களில் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கேட்ட பணத்தைத் தராவிட்டால் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய நிலையில், ஜூலை 18 முதல் தீபக் ராய் திடீரென மாயமாகியுள்ளார். பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாயமான தீபக் ராயைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்றும், தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்புகார் குறித்துப் பேசிய நர்சிங்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் பூரியா, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விசாரணையில் காவல்துறையினர் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாயமான இளைஞரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
