LATEST NEWS
யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…! பாஜகவுடன் அதிமுக + திமுக ரகசியக் கூட்டணி..? அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன பகீர் உண்மை..!
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் பாஜகவின் ஆதரவோடு இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வரவிருக்கும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் மற்றும் வழக்குகளில் இருந்து தங்களின் குடும்பச் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த ரகசியப் பின்னணி வேலைகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார். இந்தச் சதியை ஏற்க முடியாமல்தான் கூட்டணிக் கட்சிகள் வெளியேறியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த குறுக்குவழி அரசியல் முயற்சிகளுக்கு திமுக மற்றும் அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியடைந்து விலகி வருவதாகவும் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க மு.க.ஸ்டாலினே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படும் தகவலையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த இரு கட்சிகளும் பாஜகவிடம் முழுமையாகச் சரணடைந்து, மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு பாஜகவோடு இணைந்துவிடும் என்றும் அவர் பரபரப்பான தகவலை வெளியிட்டார்.
மாற்றுத் தரப்பில் இருந்து தலைவர்கள் விலகுவதற்கும் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்திய நிர்மல் குமார், தமிழகத்தில் இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பதை உறுதிபடக் கூறினார். சமீபத்தில் ஆளுநரைச் சந்தித்ததில் எந்தவிதமான அரசியலும் இல்லை என்றும், அது முற்றிலும் வழக்கமான அரசு அலுவல் சார்ந்த சந்திப்பு மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், அமைச்சர் சரத் மீதான போதைப்பொருள் சர்ச்சை குறித்த விளக்கத்தை த.வெ.க தலைமை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
