LATEST NEWS
வங்கி கார்டுகள், ஆதார் கார்டுகள் மூட்டை மூட்டையாகப் பதுக்கல்… வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிகள்… தபால்காரர் அதிரடி சஸ்பெண்ட்..!!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் தபால்காரராகப் பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களை வழங்காமல் தனது வீட்டில் பதுக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கடித்ததால், அதைப்பிடிக்கச் சென்ற நகராட்சி ஊழியர்கள் வீட்டின் அருகே தபால்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, தபால்துறை அதிகாரிகள் செந்தில்குமாரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் தேங்கிக் கிடந்த ஆதார் அட்டைகள், ஏடிஎம் கார்டுகள், வங்கி ஆவணங்கள், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அரசு கடிதங்கள் என மொத்தம் 7 பெரிய சாக்கு மூட்டைகளில் தபால்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு ஆவணங்களைப் பொறுப்பற்ற முறையில் கையாண்டு, பொதுமக்களுக்குச் சேவை குறைபாடு ஏற்படுத்திய குற்றத்திற்காகத் தபால்காரர் செந்தில்குமாரை திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தபால்களைத் தரம் பிரித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் உடனடியாகக் கொண்டு சேர்க்கும் பணிகளைத் தபால்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
