LATEST NEWS
“உன்னைப் போல 1000 பேரை புருஷனா” மனைவி சொன்ன அந்த வார்த்தை… கொலை வழக்கில் கணவனின் ஆயுள் தண்டனையை குறைத்த நீதிமன்றம் ..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை அம்மாநில உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாகக் குறைத்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு குல்பஹேரி ஆற்றங்கரையோரம் ஷிவா என்பவர் தனது மனைவி கிரணைக் கல்லால் அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிந்த்வாரா விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்த நிலையில், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, தங்களுக்குள் ஏற்பட்ட வார்த்தை தகராறில், “உன்னைப் போன்று ஆயிரம் கணவர்களை என்னால் வைத்துக் கொள்ள முடியும்” என்று மனைவி கிரண் ஏளனமாகப் பேசியதாக ஷிவா தரப்பில் வாதாடப்பட்டது. இக்கூற்று ஒரு கணவராக அவருடைய சுயமரியாதையைக் காயப்படுத்தி, கடுமையான மற்றும் திடீர் ஆத்திரமூட்டலை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும், இக்கொலை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்பதையும், சம்பவம் நடந்த உடனேயே ஷிவாவே உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதன் அடிப்படையில், இந்த வழக்கைக் திட்டமிட்ட கொலை என்ற பிரிவில் சேர்க்காமல், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 பகுதி II-ன் (குறைவான தீவிரத்தன்மை கொண்ட குற்றவியல் கொலை) கீழ் மாற்றி அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ஷிவாவின் ஆயுள் தண்டனை 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையாகவும், ரூ. 1,000 அபராதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது தற்காப்பு மற்றும் சுயக்கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் வார்த்தைகள் சட்டரீதியாக எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும் என்ற விவாதத்தை இந்தத் தீர்ப்பு கிளப்பியுள்ளது
