LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் காட்சி..! காமேனி இறுதிச்சடங்கில் தேசியக் கொடி போர்த்தப்பட்ட 14 மாத பேத்தியின் சவப்பெட்டி… கண்ணீரில் மூழ்கிய ஈரான்…!
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில், அப்போதைய ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் கொடூரத் தாக்குதலில் அலி காமேனியுடன் சேர்த்து அவருடைய மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் அவருடைய 14 மாதமே ஆன பேத்தி ஜஹ்ரா ஆகியோரும் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்ததாலும், கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவியதாலும் கடந்த 4 மாதங்களாக அவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்படாமல் குளிரூட்டப்பட்ட ரகசிய அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.
தற்போது போர்ப் பதற்றங்கள் தணிந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள சூழலில், நேற்று தெஹ்ரானில் உள்ள இமாம் கமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் இவர்களது உடல்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. அங்கு அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்களின் நெஞ்சையும் உலுக்கும் விதமாக ஒரு காட்சி அமைந்திருந்தது. அது, ஈரான் தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பெரிய சவப்பெட்டிகளுக்கு நடுவே, அதே தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த காமேனியின் 14 மாதப் பேத்தி ஜஹ்ராவின் சிறிய சவப்பெட்டிதான். போரின் கொடூரத்தையும், அது அப்பாவி உயிர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் இந்தத் துயரக் காட்சி உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, இன்னும் சில நாட்களுக்குப் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் இவர்களது உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து, வரும் ஜூலை 9 அன்று மஷ்ஹாரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா நினைவிடத்தில் இவர்களது உடல்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படவுள்ளன என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த இறுதிச்சடங்கு நிகழ்வு ஈரான் நாடு முழுவதும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
