LATEST NEWS
கோட்டை டூ நாமக்கல் கவிஞர் மாளிகை… சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் இட மாற்றம் – பின்னணி என்ன..?
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் முதன்மைக் கட்டிடத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் , தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படவுள்ளது. தற்போது முதலமைச்சர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நிலவி வரும் கடுமையான இடநெருக்கடி மற்றும் பொதுமக்கள், அரசு அதிகாரிகளின் வருகை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாற்றத்தின் மூலம், முதலமைச்சரின் முதன்மைப் புதிய அலுவலகம் மிக விரைவில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடனான மாநாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த கூட்ட அரங்கில் இருந்த நாற்காலிகள், மேசைகள் மற்றும் இதரப் பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. இந்த 10-வது மாடியில் முதலமைச்சரின் தனி அறை மற்றும் அவரது செயலாளர்களுக்கான அறைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இடமாற்றப் பணிகள் அனைத்தும் இன்னும் சில தினங்களில் முழுமைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
