LATEST NEWS
CM விஜய் உட்பட 7 பேர் திடீர் ராஜினாமா… தமிழகத்திற்கு 38.5 கோடி ரூபாய் கூடுதல் நிதி சுமை… இடைத்தேர்தல் செலவு கணக்கால் அதிரும் தமிழக அரசியல் களம்..!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உட்பட 7 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளனர். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் தனது திருச்சி கிழக்குத் தொகுதிப் பதவியைத் துறந்தார். அவருடன் சேர்த்து, எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து விலகி ஆளுங்கட்சியான தவெக-வுக்கு ஆதரவளித்த 6 எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், தமிழகத்தில் தற்போது மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க அரசுத் தரப்பில் மொத்தம் 1,302 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி கணக்கிட்டுப் பார்த்தால், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்குத் தேர்தலை நடத்த தோராயமாக 5.5 கோடி ரூபாய் வீதம் தேர்தல் ஆணையத்தால் செலவிடப்பட்டுள்ளது. மக்களாட்சித் தத்துவத்தின்படி தேர்தல் முறையானது அவசியமான ஒன்று என்றாலும், குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது காலியாகியுள்ள இந்த 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் ஒரு தொகுதிக்கு 5.5 கோடி ரூபாய் என்ற கணக்கீட்டின்படி, இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மட்டும் நடத்த அரசுக்குக் கூடுதலாகச் சுமார் 38.5 கோடி ரூபாய் வரை வீண் விரயம் மற்றும் கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமரிசித்து வருகின்றனர்.
