LATEST NEWS
72 பேரை பலி வாங்கிய கராச்சி தீ விபத்தில் திடீர் திருப்பம்… 11 வயது சிறுவன் மீது பாய்ந்தது வழக்கு… நடந்தது என்ன..? அதிரவைக்கும் பின்னணி..!!
பாகிஸ்தானின் கராச்சியில் நிகழ்ந்த 72 பேர் பலியான கொடூர தீ விபத்து வழக்கில், 11 வயது சிறுவன் மீது விசாரணை தொடங்க உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 17 அன்று கராச்சியின் புகழ்பெற்ற எம்.ஏ. ஜின்னா சாலையில் உள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில் இந்த விபத்து நேரிட்டது. இந்த வணிக வளாகத்தில் பரவிய பயங்கரத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு ஒரு வாரம் காலம் தேவைப்பட்டது.
காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, தந்தை இல்லாத நேரத்தில் அந்தச் சிறுவன் அங்குள்ள செயற்கைப் பூக்கடையைக் கவனித்து வந்துள்ளான். அப்போது அவன் தீக்குச்சிகளுடன் விளையாடியதே இந்த விபத்துக்குக் காரணம் என அரசு தரப்பு சாட்சிகள் தெரிவித்துள்ளனர். அங்கு கடையிலிருந்த 13 வயதுடைய மற்றொரு சிறுவனும், தனது நண்பனான இந்தச் சிறுவன் தீக்குச்சியால் விளையாடியபோதுதான் திடீரென தீப்பிடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
இந்த வழக்கில் அந்தச் சிறுவனுடன் சேர்த்து அவனது தந்தை மற்றும் தலைமறைவாக உள்ள குல் பிளாசா நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 42 சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ள இந்த கோர விபத்தில் மொத்தம் 72 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர் மற்றும் 1,153 கடைகள் எரிந்து சாம்பலாகின. சிறுவன் உள்ளிட்ட மற்றவர்கள் விரைவில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள உள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
