LATEST NEWS
பெரும் பரபரப்பு..! விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி… தனிப்படை போலீஸ் தீவிரம்; விரைவில் கைது நடவடிக்கை..?
தமிழக வெற்றி கழக அரசை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு எதிராக சென்னை காவல்துறை தீவிர அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறது. தவெக கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகப் பதிவான புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் இருப்பதாகக் கூறி, அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க ஏற்கனவே ‘லுக்-அவுட்’ நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும், ஜூலை 6, 2026 அன்று அவர்கள் இருவரோ அல்லது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களோ விசாரணைக்கு ஆஜராகவில்லை. சம்மனைப் புறக்கணித்து அவர்கள் ஆஜராகாத காரணத்தால், தலைமறைவாக இருக்கும் அவர்களைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் தனிப்படை போலீசார் களமிறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
