DISTRICT NEWS
“அரசுப் பள்ளிகளுக்கு வந்த பெருஞ்சோகம்.. மதுரையில் அடுத்தடுத்து பூட்டப்பட்ட 3 பள்ளிகள்… அலறும் கிராம மக்கள்”..!!
மதுரை அருகே உள்ள சுரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓனப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் மாணவர் சேர்க்கை ‘பூஜ்யம்’ ஆனதால், அங்கிருந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பூட்டுப் போட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே சரிவைச் சந்தித்து வந்த மாணவர் எண்ணிக்கையின் இறுதிப் புள்ளியாக, அங்கிருந்த ஓரிரு மாணவர்களையும் பெற்றோர்கள் வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். இதனால், ஒரு மாணவர்கூட இல்லாத சூழல் உருவாகி, கல்வித்துறையின் விதிப்படி இந்த 3 அரசுப் பள்ளிகளும் மூட நேரிட்டது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களையும் தீவிரமாகச் செயல்படுத்தி ஆதரவளித்து வருகிறது. இத்தகைய சூழலிலும், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் முன்வராதது கல்வி ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் பெற்றோர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
