LATEST NEWS
“பயங்கரவாதத்திற்கு இனி இடமில்லை!” – ஆஸ்திரேலிய மண்ணில் நரேந்திர மோடி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!
பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். மெல்போர்ன் நகரில் அவருக்கு அந்நாட்டு அரசு மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனீசைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் 18 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, மெல்போர்னில் உள்ள புகழ்பெற்ற மார்வெல் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் மத்தியில் அவர் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.
இந்த பிரம்மாண்ட கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாதுகாப்புத் திறன் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை உலகிற்குப் பறைசாற்றினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் எல்லை தாண்டி நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ துல்லியத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு வலிமையையும் பயங்கரவாதத்தின் மீதான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மிக் கொள்கையையும் உலகிற்கு நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ஒரு சர்வதேச பிராண்டாக உருவெடுத்துள்ளதாகவும், உலகச் சந்தையில் இந்தியத் தயாரிப்புகளின் ஆதிக்கம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
