LATEST NEWS
“என்னைய கவுக்க பார்க்குறாங்க, ஆனா நான் அசர மாட்டேன்” தவெக ஓட்டு பஞ்சாயத்து பத்தி திருமாவளவன் ஓப்பனா பேசின பரபரப்பு அரசியல் மேட்டர்..!!
விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தன்னை அரசியல் மற்றும் உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்தச் சிலர் திட்டமிட்டுச் சதி செய்து வருவதாகத் தனது அடுக்கடுக்கான ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நிலவி வந்த இருதுருவ அரசியல் கலாச்சாரத்தை உடைத்து, தற்போது த.வெ.க. தலைவர் விஜய் 35 சதவீத வாக்குகளுடன் ஒரு பலமான சக்தியாக உருவெடுத்துள்ளார் என்றும், இதனால் இரு திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கு மாற்றத்தை மறைத்து, விசிகவின் வாக்குகள் தான் தவெகவுக்கு முழுமையாக மாறிவிட்டதாக ஒரு தவறான தோற்றத்தைத் திட்டமிட்டுச் சிலர் உருவாக்கி வருகிறார்கள் என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு திமுக கூட்டணி தொடர்ந்து பெற்ற வெற்றிகளில் விசிக மற்றும் தலித் மக்களின் பங்களிப்பு மகத்தானது என்ற யதார்த்தத்தை மறைக்கவே இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன என்று திருமாவளவன் சாடியுள்ளார். தலித் மக்கள் சினிமா மோகத்தில் வாக்கு செலுத்தியதாகக் கூறுவது, அவர்களை அரசியல் அறிவற்றவர்களாகக் காட்டும் உள்நோக்கம் கொண்ட செயலாகும். மேலும், தான் குழப்பமடைவதாகக் கூறுபவர்கள், தவெகவுடன் கூட்டணி வைக்கும்போது நட்பு அடிப்படையில் தான் மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததையும், அமைச்சரவையில் சேரும்போது மூத்த அமைச்சர்களிடம் முறைப்படி தெரிவித்த நாகரிக அணுகுமுறையையும் விமர்சிப்பது நியாயமற்றது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எல்லா அரசியல் புயல்களிலும் விசிக கட்டுக்கோப்பாக இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்கவே இத்தகைய உளவியல் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என அவர் ஆதங்கப்பட்டுள்ளார். இருப்பினும், தங்களுக்குள் எந்தவித பழிவாங்கும் எண்ணமும் இல்லை எனத் தெரிவித்த அவர், திமுக மற்றும் மதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் விசிகவை விமர்சித்தாலும், அதற்குப் பதில் கொடுக்கும் வகையில் விசிக தொண்டர்கள் யாரும் சமூக வலைதளங்களில் அவர்களைத் திருப்பி விமர்சிக்க வேண்டாம் என்றும் அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
