LATEST NEWS
இப்படியும் நண்பர்களா..?! 25 ஆண்டு காலக் கடனைத் திருப்பிக் கொடுக்க… நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்த நெகிழ்ச்சிப் பின்னணி..!!
கேரளாவைச் சேர்ந்த ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் கடன் கொடுத்த தெலங்கானா நண்பரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரில் சென்று கடனைத் திருப்பிச் செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரும், தெலங்கானாவின் ஜகித்யால் மாவட்டத்திலுள்ள தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்த எட்லா லச்சன்னா என்பவரும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். அப்போது, தனது தனிப்பட்ட தேவைக்காக இஸ்மாயில் தனது நண்பர் லச்சன்னாவிடம் சில பணத்தை கடனாகப் பெற்றிருந்தார். இந்தியா திரும்பியதும் எப்படியாவது அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகவும் உறுதியளித்திருந்தார்.
இருப்பினும், அவர்கள் தாயகம் திரும்பிய பிறகு சூழ்நிலை காரணமாக இருவருக்கும் இடையேயான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இஸ்மாயிலிடம் லச்சன்னாவின் போன் நம்பரோ அல்லது முழுமையான முகவரியோ இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்தும் தன்னிடம் உதவி செய்த நண்பனுக்குக் கொடுக்க வேண்டிய கடனை அவர் மறக்கவில்லை. எப்படியாவது லச்சன்னாவைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று உறுதியாக இருந்த இஸ்மாயில், லச்சன்னாவின் ஊர் தர்மபுரி என்ற ஒரு சிறு தகவலை மட்டுமே வைத்துக்கொண்டு, கூகுள் மற்றும் இணையத்தின் உதவியோடு தேடத் தொடங்கினார். இறுதியில், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து தெலங்கானாவில் உள்ள தர்மபுரி கிராமத்தை அடைந்து, அங்குள்ள உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒருவழியாக லச்சன்னாவின் வீட்டைக் கண்டுபிடித்தார்.
இஸ்மாயில் அங்கு சென்றபோது, லச்சன்னா வேலை விஷயமாக மீண்டும் ஒரு வளைகுடா நாட்டிற்குச் சென்றிருந்தார். இதனால் அவரது குடும்பத்தினரைச் சந்தித்த இஸ்மாயில், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு லச்சன்னாவிடம் தொலைபேசி மூலம் பேசினார். லச்சன்னாவிற்கு ஆரம்பத்தில் இந்த கடன் விஷயம் நினைவுக்கு வரவில்லை என்றாலும், தனது பழைய நண்பரின் குரலைக் கேட்டதும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். பின்னர், இஸ்மாயில் தான் கொண்டு வந்திருந்த ரூ.25,000 ரொக்கப் பணத்தை லச்சன்னாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இத்தனை ஆண்டுகள் தன் மனதில் பாரமாக இருந்த கடனைத் தீர்த்ததால் நிம்மதி அடைந்துள்ளதாகக் கூறிய இஸ்மாயிலின் நேர்மையையும், உண்மையான நட்பையும் லச்சன்னாவின் குடும்பத்தினரும், அந்தப் பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.
