LATEST NEWS
“ஸாரி ஆனந்த் மஹிந்திரா சார்..!” வேலை செய்யல… ஆனா சம்பளம் வாங்கினேன்..! டெக் மஹிந்திரா முதலாளியிடம் உண்மையை உடைத்த தெலுங்கு இயக்குநர்..!!
தெலுங்குத் திரையுலகில் இயக்குநராக இருக்கும் சாய் மார்த்தாண்ட், சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள தனது பழைய நினைவுகள் குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘டெக் மஹிந்திரா’வில் நெட்வொர்க் இன்ஜினியராகப் பணிபுரிந்துள்ளார். கொரோனா காலக்கட்டம் என்பதால், இவருக்கு முழுமையாக ‘வீட்டிலிருந்தே வேலை செய்யும்’ வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விலகிய தினத்தை நினைவுகூர்ந்து சாய் மார்த்தாண்ட் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் இரண்டு ஆண்டுகள் வீட்டிலிருந்தே வேலை செய்தபோது, நிறுவனத்தின் பணிகளைச் சரியாகச் செய்யாமல், தூங்குவது, உறவினர்களுடன் அரட்டை அடிப்பது, திரைப்படங்கள் மற்றும் சினிமா நேர்காணல்களைப் பார்ப்பது என தனக்கு பிடித்தமான வேலைகளை மட்டுமே செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிடம், “ஸாரி ஆனந்த் மஹிந்திரா சார்…” என்று தனது பதிவின் மூலம் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
https://www.instagram.com/p/DXBmZNTkYND/?utm_source=ig_web_button_share_sheet
இருப்பினும், தனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்த தனது அலுவலகக் குழுவினருக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். டெக் மஹிந்திரா வேலையை விட்டு விலகிய பிறகு சினிமா துறையில் நுழைந்த சாய் மார்த்தாண்ட், கடந்த 2025 ஆம் ஆண்டு ‘லிட்டில் ஸ்டோரி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்; அடுத்ததாகப் பிரபல நடிகர் அதிவி சேஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இவரது இந்த வெளிப்படையான பதிவைப் பாராட்டி பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இது போன்ற ஊழியர்களால்தான் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை தரும் திட்டத்தை நிறுத்த யோசிக்கின்றன என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
