DISTRICT NEWS
சமாதானம் பேசப்போன இடத்தில் இப்படியா? திருமண மண்டபத்தில் ரத்த வெள்ளத்தில் முடிந்த விபரீதம்.!வைரலாகும் கொடூர வீடியோ..!
திருப்பதி அருகே குடும்பப் பிரச்சினை ஒன்றில் சமாதானம் பேசச் சென்ற இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த முனிரத்னம் ரெட்டி மற்றும் சுப்பாரெட்டி நகரின் மணிகண்டா ஆகியோர், தங்களுக்கு நெருக்கமான சம்பூர்ணம்மா என்பவரின் மகள் மற்றும் அவரது கணவர் சுனில் இடையேயான திருமண முறிவை சரிசெய்ய தொடர்ந்து முயன்று வந்துள்ளனர். இதற்காக சுனிலை நேரில் சந்தித்துப் பேச நினைத்த அவர்கள், திருச்சானூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அவர் வந்திருப்பதை அறிந்து அங்கு சென்றனர். மனைவியைப் பிரிந்துவிட்டு விழாக்களில் பங்கேற்பது குறித்து அவரிடம் தட்டிக்கேட்டபோது, இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த சுனில் மற்றும் அவரது உறவினர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த முனிரத்னம் ரெட்டி சம்பவ இடத்திலேயே பலியாக, மணிகண்டா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். துணை காவல் கண்காணிப்பாளர் பக்தவத்சலம் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு அதிரடி விசாரணையைத் தொடங்கினர். தப்பியோட முயன்ற கொலையாளிகளைப் பிடிப்பதற்காக உடனடியாக நகரின் எல்லைகள் மூடப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் பலனாக, முக்கிய குற்றவாளியான சுனில் மற்றும் ஜங்காலபல்லி பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். திருமண மண்டபம் அருகே கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
