LATEST NEWS
மருத்துவர் வீட்டில் பயங்கரம்..! மருமகளைக் கட்டிப்போட்டு, முடியை வெட்டி, மயக்க ஊசி செலுத்தி.. கொள்ளையர்கள் செய்த கொடூரம்… பீகாரில் அரங்கேறிய சினிமா பாணி நெஞ்சை பதறவைக்கும் கொள்ளை..!!
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளையர்கள், அங்கிருந்த இளம் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்து, அவரது முடியை வெட்டி, மயக்க ஊசி போட்டு ₹5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளனர். பகதூர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட தர்ஹார் கிராமத்தில் வியாழக்கிழமை மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்த 5 முகமூடி கொள்ளையர்கள் சுமார் 20 நிமிடங்கள் வீட்டில் கொடூரமான முறையில் வன்முறையை அரங்கேற்றியுள்ளனர்.
கொள்ளை நடந்த சமயத்தில் வீட்டில் மருத்துவரின் இளைய மருமகள் கரிஷ்மா தேவியும் (22) அவரது ஒன்றரை வயது பெண் குழந்தையும் மட்டுமே இருந்துள்ளனர். பெண்ணின் அலறல் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க கொள்ளையர்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் (TV) சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர். பின்னர் அவரைத் தாக்கி, கைகால்களைக் கட்டிப் போட்டு, பின் முதுகில் மயக்க ஊசி செலுத்தி அலமாரிகளை உடைத்துள்ளனர்.
கொள்ளையர்கள் வீட்டில் இருந்த மங்களசூத்திரம், கம்மல், மோதிரம், கொலுசு உள்ளிட்ட ₹5 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ₹35,000 ரொக்கப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகதூர்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
