CRIME
“தற்கொலையா? திட்டமிட்ட கொலையா?.. திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. சடலத்தின் புகைப்படத்தை மாமனாருக்கு அனுப்பிய கணவன்.. நெஞ்சை உலுக்கும் லக்னோ சம்பவம்”..!!
பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி என்ற இளம்பெண்ணுக்கும், போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கமலாகாந்த் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. லக்னோவின் இந்திரா நகர் பகுதியில் உள்ள வாடகை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்களது 4 மாத திருமண வாழ்க்கை தற்போது மரணத்தில் முடிந்துள்ளது. சோனாலி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சோனாலியின் கணவர் கமலாகாந்தைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமலாகாந்த் போலீசாரிடம் கூறும்போது, “நாங்கள் காஷ்மீருக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தோம். பணிச்சுமை காரணமாக விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நான் வேலைக்குச் சென்றுவிட்டேன். ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் சோனாலிக்கு அனுப்பிவிட்டு, அவரைத் தொடர்ந்து போனில் அழைத்தேன். அவர் எடுக்காததால் வீட்டு உரிமையாளரைப் பார்க்கச் சொன்னேன். அவர் சோனாலி தூக்கில் தொங்கியதைக் கண்டறிந்தார்” என்று கூறியுள்ளார். ஆனால், சோனாலியின் குடும்பத்தினர் இது தற்கொலை அல்ல, கொலை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இறந்த பெண்ணின் சகோதரர் அபிஷேக் ஓஜா போலீசில் அளித்துள்ள புகாரில், திருமணத்தின் போது 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2.5 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் கொடுத்த பிறகும், கார் மற்றும் கூடுதல் பணம் கேட்டு சோனாலியை அவரது கணவரும் புகுந்த வீட்டாரும் தொடர்ந்து சித்திரவதை செய்ததாகக் கூறியுள்ளார். சோனாலியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை போல ஜோடித்துள்ளதாகவும், அவர் இறந்து கிடந்ததை கமலாகாந்த் புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இப்புகாரின் பேரில் கணவர் கமலாகாந்த், அவரது பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் மீது வரதட்சணை மரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையில் தூக்கிட்டதால் மரணம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டாலும், அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
