CRIME
ரோடுல இனி யாருக்கும் உதவவே பயமா இருக்கு..! செம ஸ்கெட்ச் போட்டு.. ரூ.1 லட்சம் போனைத் தூக்கிய பைக் ஆசாமிகள்..! அதிர வைக்கும் சிசிடிவி..!!
ஹைதராபாத்தின் சரூர்நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பைக்கில் வந்த இருவர், சாலையில் நடந்து சென்ற பாதசாரிக்கு முன்னால் திட்டமிட்டு வண்டியைத் திருப்பி, கீழே விழுவது போல நாடகமாடியுள்ளனர். விபத்தில் சிக்கியவருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்தப் பாதசாரி உடனடியாகப் பைக் ஓட்டியின் அருகே சென்று வண்டியைத் தூக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது, அவருக்கு உதவுவது போல மற்றொரு நபரும் அங்கு வந்துள்ளார். அந்தப் பாதசாரி கீழே விழுந்தவருக்கு உதவுவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த நேரத்தில், திருடர்களில் ஒருவன் மிகவும் சாதுரியமாகப் பாதசாரியின் சட்டையின் முன் பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போனைத் திருடியுள்ளான். திருடிய சில நொடிகளிலேயே, இருவரும் தங்களின் பைக்கில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை உணராத அந்தப் பாதசாரி, பைக் சென்ற பிறகு தனது பாக்கெட்டைச் சோதித்தபோதுதான் போன் திருடப்பட்டதை அறிந்தார்.
இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை விவாதிக்கும் இணையவாசிகள் பலர், “இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களால் தான், உண்மையில் ஆபத்தில் இருப்பவர்களுக்குக் கூட மக்கள் சாலையில் உதவத் தயங்குகிறார்கள்” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற விபத்து நாடகங்கள் மற்றும் கவனத்தைத் திசைதிருப்பும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு உதவும்போதும் தங்களின் உடைமைகள் விஷயத்தில் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.
