CRIME
“காதல் என்ற பெயரில் சீரழிவு..!” அரசு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய.. 20 வயது வாலிபர் போக்சோவில் அதிரடி கைது..!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சுதர்சன் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து, இருவரும் நெருக்கமாக பழகி அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுதர்சன் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பதற்றமடைந்த அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, சுதர்சன் தன்னை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததை சிறுமி ஒப்புக்கொண்டார். இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குற்றம் நிரூபணமானதைத் தொடர்ந்து, சுதர்சனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
