LATEST NEWS
அதிமுக + திமுக + பாஜக ரகசிய டீல்?.. விஜய் ஆட்சியை கவிழ்க்க நடக்கும் மெகா பேரம்.. அமைச்சர் நிர்மல் குமார் போட்ட அணுகுண்டு.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026-27 நிதியாண்டிற்கான முதல் முழு பட்ஜெட், வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முக்கியப் பிரகடனங்கள் குறித்து பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இதற்கான இறுதி வடிவத்தைக் கொடுக்கும் பொருட்டு அதிகாரப்பூர்வ அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடி விவாதித்தது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் நிறைவடைந்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு, திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து தவெக ஆட்சியை வீழ்த்த முயற்சிப்பதாகவும், அதன் காரணமாகவே தங்களது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பேரம் பேசி வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், சமீபத்திய காவல் மரணங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், தவறு செய்தவர்கள் மீது தவெக அரசு நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், முந்தைய அரசுகளைப் போல எதையும் மூடி மறைக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார். புழல் சிறையில் நிகழ்ந்த மரணம் முதற்கட்ட விசாரணையில் உடல்நலக் குறைவால் ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ள போதிலும், அதுகுறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். நாகர்கோவில் சிறையில் மரணமடைந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூற உள்ளதாகத் தெரிவித்த அவர், பழனி நில பதிவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கும் தவெக அரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் உறுதியளித்தார்.
