LATEST NEWS
அன்றே சொன்னார் சோ.. 36 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய தமிழக அரசியலை அப்படியே கணித்து சொன்ன தீர்க்கதரிசனம்.. இப்ப அப்படியே பலிச்சிருச்சே..!!
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக கூட்டணி ஆட்சி அமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதே நேரத்தில், தமிழக அரசியலின் இரு துருவங்களாகக் கருதப்பட்ட திமுகவும் அதிமுகவும் தங்களின் தசாப்த காலப் பகைமையை மறந்து, தவெகவை வீழ்த்த கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த அதிர்ச்சிகரமான அரசியல் நகர்வை திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் உறுதிப்படுத்தியுள்ளனர். எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகள் எவ்வாறு இணைய முடியும் என்று பொதுமக்கள் வியந்து பேசும் வேளையில், 36 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் விமர்சகரும் ‘துக்ளக்’ ஆசிரியருமான சோ இதனைத் துல்லியமாகக் கணித்துள்ளார். கடந்த 1990-ஆம் ஆண்டு துக்ளக் இதழில், “திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேருவார்களா?” என்ற வாசகரின் கேள்விக்கு பதிலளித்த சோ, எதிர்காலத்தில் இரு கட்சிகளும் தனித்து ஜெயிக்க முடியாத ஒரு பொதுவான சூழல் உருவாகும் போது, அவை நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று குறிப்பிட்டிருந்த தீர்க்கதரிசனமான கருத்து இப்போது உண்மையாகியுள்ளது.
