CRIME
“உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம்…!” வாட்ஸ்-அப் வீடியோ காலில்.. ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை மிரட்டி ரூ.22 லட்சம் சுருட்டல்..!!
கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியருக்கு, கடந்த ஜூலை 10-ஆம் தேதி வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சீருடையில் தோன்றிய நபர், தான் மும்பை கொலாபா சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி எனக் கூறிப் பேசியுள்ளார். மேலும், முதியவரின் பெயரில் மும்பையில் உள்ள வங்கி கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார். தனக்கு மும்பையில் எந்த வங்கி கணக்கும் இல்லை என முதியவர் கூறியபோதிலும், அவரது அடையாள அட்டையைப் பயன்படுத்தி கணக்கு தொடங்கப்பட்டு குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளதாக அந்த நபர் மிரட்டியுள்ளார்.
தனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போலப் பல நபர்கள் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் தோன்றி அவரை ‘டிஜிட்டல் கைது’ செய்வதாக மிரட்டியுள்ளனர். வங்கி கணக்கு சரிபார்ப்புக்காக அவரது கணக்கில் உள்ள பணத்தை ஆர்.டி.ஜி.எஸ். மூலம் தங்கள் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், சரிபார்ப்பு முடிந்து குற்றம் ஏதும் இல்லை என உறுதியானதும் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் போலி வார்த்தைகளை உண்மை என நம்பிய அந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.22 லட்சம் வரை அவர்களது கணக்கிற்குச் செலுத்தியுள்ளார்.
பணத்தை அனுப்பிய பிறகு தான் ‘டிஜிட்டல் கைது’ என்ற போலி மோசடி வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்த முதியவர், அந்த மர்மநபர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதியவரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்து தப்பிய மர்மநபர்களைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
