LATEST NEWS
கடன் கேட்ட முதியவர் கொடூரக் கொலை..! கோரக்பூரில் 10ஆம் வகுப்பு மாணவனின் வெறிச்செயல்..! ஆற்றுப் பகுதியில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டம், மலாவ் பகுதியைச் சேர்ந்த 70 வயதான நகை மற்றும் பாத்திரக் கடை உரிமையாளரான ராம்லால் வர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்டு ராப்தி ஆற்றில் வீசப்பட்டார். வழக்கம்போல் காலையில் கடைக்குச் சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில், மாலையில் ஆற்றங்கரையில் அவரது சடலம் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. அவரது உடலைக் கைப்பற்றி நடத்திய பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்தில் கத்தியால் 6 முறை கொடூரமாகக் குத்தப்பட்டு மூச்சுக்குழாய் துண்டிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரமும் மாயமாகியிருந்தது.
இச்சம்பவம் குறித்து ராம்லாலின் மூத்த மகன் அளித்த புகாரின் பேரில், பேலிபார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ பகுதி மற்றும் மலாவ் சந்திப்பில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராம்லால் வர்மா ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருடன் சென்றுள்ளது தெரியவந்தது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், நகைக்கடை உரிமையாளர் கொல்லப்பட்டதற்கான பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
பிடிபட்ட சிறுவன் ஒருவன் பைக் வாங்குவதற்காக ராம்லாலிடமிருந்து ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தான். ராம்லால் அந்தப் பணத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது உறவினர்களுடன் சேர்ந்து அவரைக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளான். கோயில் தரிசனம் செய்வதாகக் கூறி அவரை ஆள்நடமாட்டம் இல்லாத ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, கத்தியால் கழுத்தில் குத்திக் கொன்று உடலை ஆற்றில் வீசியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சதித்திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
