LATEST NEWS
“சட்டமன்றத்தை ‘ரீல்ஸ்’ ஆக்குவதா..? மேடையிலேயே கலங்கிய பெண் நிர்வாகி..! இளம்பெண்ணின் கண்ணீருக்கு… அன்பில் மகேஷ் கொடுத்த பதில் என்ன..?!”
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வந்த நிலையில், அங்கு பங்கேற்ற இளம்பெண் நிர்வாகி ஒருவர் பேசிய கருத்துக்கள் அனைவரையும் சிந்திக்க வைத்தது.
இன்றைய டிஜிட்டல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை ‘ரீல்ஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கிண்டலாகவும் விளையாட்டுத்தனமாகவும் பலர் பகிர்ந்து வருவது வேதனையளிப்பதாக அந்த இளம்பெண் கூறினார். மாபெரும் தலைவர்களும் திறமையான ஆளுமைகளும் கண்ணியம் காத்த தமிழக சட்டமன்றத்தையும், பாரம்பரிய தமிழ் சமூகத்தையும் வெறும் ‘ரீல்ஸ்’ மோகத்திற்காக தரம் தாழ விடலாமா எனக் கூறி, உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி அழுதுள்ளார்.
அவரது ஆதங்கத்தையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு உடனடியாகப் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அழாதீர்கள், உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான்; அவர்களுக்குப் பண்பாட்டையும் சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச் சொல்லி அன்போடு திருத்துவோம்” என்று கூறி அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
