LATEST NEWS
ஜப்பானையே உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! நொடிப் பொழுதில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்… உயிருக்குப் போராடும் மக்கள்… நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் தகவல்..!!
தென்மேற்கு ஜப்பானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டும் கடும் சேதம் உருவாகியுள்ளது. 7.1 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியை கடுமையாகப் பாதித்ததுடன், ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் அதிகபட்சமான 7 என்ற அளவைப் பதிவு செய்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காஷிமா நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் இரண்டாவது மாடி இடிந்து விழுந்ததில், சுமார் 20 முதல் 30 ஊழியர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவசரகால வாகனங்களின் உதவியுடன் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வணிக வளாகத்திற்குள் உயிரிழப்புகள் ஏதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
நிலநடுக்கத்தின் தாக்கம் அப்பகுதி முழுவதும் பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. யட்சுஷிரோ நகரில் தொழிற்சாலை ஒன்றின் சிம்னி இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும், பல இடங்களில் வீடுகள் இடிந்தும் சாய்ந்தும் சேதமடைந்துள்ளன. தொடர் தீ விபத்துகள், பாலங்கள் சேதம் மற்றும் சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
