LATEST NEWS
“சமோசா விற்பனையாளருக்கு இருக்கும் உரிமை விவசாயிகளுக்கு இல்லையா..?” கேரளா பாணியில் தமிழ்நாட்டிலும் தனி விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும்..! விவசாயிகள் வாழ்வாதாரம் குறித்துப் பேரவையில் சௌமியா அன்புமணி காரசார உரை..!!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தரவுகளுடன் கூடிய விவாதங்களை முன்வைத்து கவனம் ஈர்த்து வரும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது குறித்து முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அவர், சாதாரணமாக சமோசா போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிக்குக்கூட தான் விற்கும் பொருளின் விலையை நிர்ணயிக்கும் உரிமை இருப்பதாக சுட்டிக்காட்டினார். ஆனால், கடுமையாக உழைத்து மக்களுக்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளால் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலையைத் தாங்களே நிர்ணயிக்க முடியாத நிலை நீடிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.
விவசாயிகளின் இந்த நிலையை மாற்றுவதற்கு கேரளாவில் நடைமுறையில் இருப்பதைப் போன்ற ஒரு தனி விலை நிர்ணய ஆணையத்தை தமிழகத்திலும் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். மேலும், அந்த ஆணையத்தில் விவசாயிகளுக்கும் முக்கிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்றும், பருவநிலை மற்றும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அவர்களே நேரடியாக விலை நிர்ணயிக்கும் வகையில் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என்பதால், இதற்கான நிரந்தரமான விலை நிர்ணய முறையை அரசு உருவாக்க வேண்டும் என்பதே அவரது கருத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.
