LATEST NEWS
“அங்கேதான் அப்பா வண்டிய ஒளிச்சாரு..! போலிஸிடம் தந்தையைக் காட்டிக்கொடுத்த 6 வயதுச் சிறுவன்… ட்ரெண்டிங் ஆகும் ‘சபாஷ் மகேந்திரா’..!!”
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள அனந்தசாகரம் கிராமத்தில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு செய்தியாக வெளியாகி உள்ளது. அக்கிராமத்தில் காவல் துறையினர் வழக்கமான பாதுகாப்புத் தணிக்கை மற்றும் வாகனச் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சுரேஷ் என்பவர் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தாலும் அல்லது சோதனையைக் கண்டு பயந்ததாலும், தனது இருசக்கர வாகனத்தை அருகிலிருந்த ஒரு தெருவில் ரகசியமாக ஒளித்து வைத்தார்.
இருப்பினும், சுரேஷின் 6 வயது மகனான மகேந்திரா தனது தந்தையின் இச்செயலைச் கவனித்துக் கொண்டிருந்தான். தந்தை செய்த காரியம் தவறானது என்று கருதிய சிறுவன், எவ்வித அச்சமுமின்றி அங்கிருந்த காவல் துறையினரிடம் சென்று, “என் தந்தை போலீஸாரைக் கண்டதும் வண்டியை அந்தத் தெருவில் ஒளித்து வைத்துள்ளார், வாருங்கள் காண்பிக்கிறேன்” என்று கூறி அதிகாரிகளை வண்டி ஒளித்து வைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றான். 6 வயதுச் சிறுவனின் இந்த நேர்மையும் தைரியமும் அங்கிருந்த காவல் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.
பின்னர், காவல் துறையினர் அந்த வாகனத்தைச் சோதனையிட்டு தந்தையிடம் விசாரணை நடத்தியபோது, அவரிடம் இருசக்கர வாகனத்திற்கான அனைத்துச் சரியான ஆவணங்களும் இருந்தது தெரியவந்தது. பதற்றத்தின் காரணமாகவே அவர் வண்டியை ஒளித்து வைத்துள்ளார். சிறுவன் மகேந்திரனின் இந்த நேர்மையைப் பாராட்டிய காவல்துறையினரும் கிராம மக்களும் அவனை “சபாஷ் மகேந்திரா” என்று பெருமையுடன் அழைத்து வாழ்த்தி வருகின்றனர்.
