LATEST NEWS
“இனி கோட்டைப் பக்கமே வரக்கூடாது..” ஆஸ்தான ஜோதிடரை விரட்டிய CM விஜய்.. பனையூர் வட்டாரத்தில் வெடித்த புதிய புயல்..!!
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ராதன் பண்டிட், இனி சென்னை தலைமைச் செயலகம் பக்கமே வரக்கூடாது என முதலமைச்சர் தரப்பிலிருந்து கடுமையாக எச்சரித்து விரட்டப்பட்டுள்ளதாக அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைமையிலான இந்த புதிய ஆட்சி அமைந்ததற்குத் தனது ஜோதிடக் கணிப்புகளும் ஆலோசனைகளுமே முழு முதற்காரணம் என ராதன் பண்டிட் செல்லும் இடமெல்லாம் பெருமையாகப் பேசி வந்துள்ளார். ஜோதிடரின் இத்தகைய அதீத பந்தாவான பேச்சுகளும், ஆட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முயன்றதும் பனையூரில் உள்ள முதலமைச்சரின் முக்கியத் தரப்பினருக்குக் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, ஜோதிடர் ராதன் பண்டிட் பரிந்துரைக்கும் எந்தவொரு காரியத்தையோ அல்லது அவர் சொல்லும் நபர்களுக்கான வேலைகளையோ அதிகாரிகள் யாரும் செய்து கொடுக்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் தனக்கு இருந்த செல்வாக்கு முற்றிலும் சரிந்து, கதவுகள் அடைக்கப்பட்டதை உணர்ந்த ஜோதிடர், தற்போது தனது அரசியல் பார்வையை தெலங்கானா மாநிலத்தின் பக்கம் திருப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் செல்வாக்கை இழந்த நிலையில், தெலங்கானா அரசியல் புள்ளிகளுக்கு ஜாதகம் பார்க்கவும் அங்கு தனது அடுத்தகட்ட காய்நகர்த்தல்களைத் தொடங்கவும் பண்டிட் திட்டமிட்டு வருவது தற்போது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
