LATEST NEWS
“அட என்னப்பா சொல்லுறீங்க, ஒரு ஏக்கர் ₹269 கோடியா..?!” தெலுங்கானா அரசு கஜானாவை நிரப்பிய பிரம்மாண்ட ஏலம்… வாயைப் பிளக்கும் மக்கள்.. ரியல் எஸ்டேட் புதிய உலக சாதனை..!!
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் முக்கிய வணிக மையமான ராய்துர்க்கில் அண்மையில் நடைபெற்ற அரசு நில ஏலம், ரியல் எஸ்டேட் துறையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இந்த ஏலத்தில், ஒரு சதுர அடி நிலம் ரூ.61,374 என்ற மலைக்கவைக்கும் விலைக்கு விற்கப்பட்ட போதிலும், அதனை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியுள்ளது. அரசுக்குச் சொந்தமான 5.38 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்காக, ஒரு ஏக்கருக்கான ஆரம்ப விலையை ரூ.269 கோடி ஆக அரசு நிர்ணயித்திருந்தது. வணிக ரீதியாக அதீத வளர்ச்சி பெற்று வரும் இந்த ஐடி காரிடார் பகுதியில் நிலத்தைக் கைப்பற்ற பல பெரும் புள்ளிகள் போட்டி போட்டதே இந்த அதீத விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
இறுதியாக, விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தின் முடிவில் மொத்த நிலமும் விற்கப்பட்டு தெலுங்கானா அரசுக்கு ரூ.1,477.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஹைதராபாத் வரலாற்றிலேயே நில விற்பனை மூலம் அரசுக்கு இவ்வளவு பெரிய தொகை வருவாயாகக் கிடைத்தது இதுவே முதல் முறை என்பதால் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. நிலத்தின் சந்தை மதிப்பு இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தாலும், சாமானிய மக்களைப் பொறுத்தவரை ஒரு சதுர அடியின் இந்த அசுர விலை வாயைப் பிளக்க வைப்பதாகவே அமைந்துள்ளது.
