CRIME
“ஒரே ஒரு வேப்பமரத்துக்காக” பெற்ற தந்தையையும், பக்கத்து வீட்டுக்காரரையும் கோடாரியால் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற மகன்.. 25 வருட பகையை தீர்த்த கொடூரம்..!!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள எர்ரகட்டா தண்டா கிராமத்தில், வீட்டிற்கு அருகில் இருந்த வேப்பமரம் தொடர்பான 25 ஆண்டுகாலத் தகராறு திடீரென வன்முறையாக மாறியதில் இரண்டு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை வீட்டின் எல்லையில் இருந்த வேப்பமரத்தை வெட்டுவதற்காக மாந்தா வெங்கடேஸ்வரலு யாதவ் (62) என்பவர் தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளார். இதற்கு எதிர்த்தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரு தரப்பிற்கும் இடையே கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கர மோதல் வெடித்தது.
இந்தக் கொடூர மோதலின் போது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த புக்கியா ராமு என்பவர் வெங்கடேஸ்வரலுவை கோடாரியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த வன்முறையைத் தடுக்க முயன்ற ராமுவின் சொந்த தந்தை புக்கியா சைதா (58) என்பவரையும் ராமு கோடாரியால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சைதா, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் தந்தை என்றும் பாராமல் மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரட்டைக் கொலையைத் தொடர்ந்து கிராம மக்கள் ஆத்திரமடைந்து குற்றவாளியின் வீட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெல்லசெருவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் (SI) நவீன் குமார், வன்முறையைத் தடுக்க முயன்ற போது தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கொலையாளி ராமுவைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு, மேலும் வன்முறை பரவாமல் தடுக்க கிராமத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
