CRIME
பகீர்..! போலி தங்கத்தை அசல்னு சொல்லி ரூ.25 கோடி சுருட்டிய பலே ஆசாமி.. 5 மாதங்களுக்குப் பின் சிக்கிய மாஸ்டர்மைண்ட்.. திடுக்கிட வைக்கும் பிண்ணனி..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் போலி தங்க நகைகளை அசல் தங்கம் எனக் கூறி அடகு வைத்து, சுமார் 25 கோடி ரூபாய் வரை வங்கி மோசடி செய்த வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சச்சின் ராவத் என்பவரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கடந்த 5 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த அவர் பிடிபட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. வங்கியின் 9 வெவ்வேறு கிளைகளில் உள்ள 152 தங்கக் கடன் கணக்குகளை மறுஆய்வு செய்தபோது, வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர், கிளை மேலாளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து இந்த மெகா கூட்டு மோசடி அரங்கேற்றப்பட்டது தணிக்கையின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சச்சின் ராவத், ஆரம்பத்தில் முறையாகக் கடன் பெற்று வங்கியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். பின்னர் தனது பழைய இரும்பு வியாபாரத்தில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் போலி நகைகள் மூலம் பல கோடி ரூபாய் கடன் பெற்றுச் சுருட்டியுள்ளார். குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில் லேப்டாப்கள், சொகுசு வாகனங்கள் மற்றும் போலி கடன் வாங்கியவர்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது சச்சின் ராவத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மோசடி செய்யப்பட்ட ஒட்டுமொத்தப் பணத்தை மீட்பதற்கும், இதில் தொடர்புடைய பிற போலி வாடிக்கையாளர்களைக் கண்டறிவதற்கும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
