LATEST NEWS
“மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம், ஆனாலும் பாக்கெட் காலி.. ” 28 வயது இளைஞனின் குமுறல்… இணையத்தில் வைரலாகும் ரெடிட் பதிவு..!!
இன்றைய காலத்தில் அதிக சம்பளம் வாங்குவது வெற்றியின் அடையாளமாகக் கருதப்படும் நிலையில், 28 வயது இளைஞர் ஒருவரின் கதை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் தளத்தில் வைரலான இந்தப் பதிவு, கைநிறையச் சம்பளம் வாங்கிய போதிலும் மாத இறுதியில் பணமின்றித் தவிக்கும் லட்சக்கணக்கான கார்ப்பரேட் ஊழியர்களின் நிஜ நிலையை வெளிப்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.25,000 சம்பாதித்து வந்த இந்த இளைஞரின் தற்போதைய மாதச் சம்பளம் ரூ.1.2 லட்சம் ஆகும். இருப்பினும், மாதத்தின் இறுதியில் அவரிடம் வெறும் ரூ.5,000 முதல் ரூ.8,000 மட்டுமே மிஞ்சும் சூழல் நிலவுகிறது.
தமது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்ட அந்த இளைஞர், வருமானம் அதிகரித்த அதே வேளையில் செலவுகளும் பல மடங்கு அதிகரித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இன்று அவரது சம்பளத்தின் பெரும் பகுதி அதிக வீாட்டு வாடகை, குடும்பப் பொறுப்புகள், மியூச்சுவல் ஃபண்ட் SIP மற்றும் அன்றாடச் செலவுகளுக்கே சரியாகிவிடுகிறது. மீதமிருக்கும் சொற்பத் தொகையும் எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகள் அல்லது பிற அவசரத் தேவைகளுக்கே செலவாகிவிடுகிறது. வாழ்க்கை முறை சாா்ந்த விலைவாசி உயர்வு மக்களின் சேமிப்பை எவ்வாறு அமைதியாகக் காலி செய்கிறது என்பதை இவரது நிலைமை தெளிவாகக் காட்டுகிறது.
இந்தப் பதிவு வெளிவந்ததும் ரெடிட் தளத்தில் நெட்டிசன்களிடையே பெரிய விவாதம் தொடங்கியது. இணைய பயனர்கள் பலர் இப்பிரச்சனை குறித்துத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், செலவுகளைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் பரிந்துரைத்தனர். ஒரு பயனர், மக்கள் பெரும்பாலும் வெளியே சாப்பிடுவதிலும் தேவையற்ற சின்னச் சின்ன விஷயங்களிலும் யோசிக்காமல் ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார்கள் என்றும், மூன்று மாதங்களுக்குத் தங்களது ஒவ்வொரு செலவையும் சரியாகக் கண்காணித்தால் உண்மை நிலைமை புரியும் என்றும் ஆலோசனையளித்தார். மற்றொரு பயனர், சம்பளம் திடீரென உயரும்போது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது பழைய சம்பளத்தில் வாழ்ந்தது போலவே வாழப் பழக வேண்டும் என்றும், SIP என்பது சேமிப்பின் ஒரு பகுதியே தவிர செலவு அல்ல என்பதால் அதை இழப்பாகக் கருதக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினர்.
