LATEST NEWS
“இப்ப ஓடி காட்டிருக்கேன்… அடுத்து ஹேண்ட்ஸ்டாண்ட் தான்..!” அமைச்சரின் கவனத்தை ஈர்க்க தொழிலதிபரின் விசித்திர போராட்டம்..!!
இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்றழைக்கப்படும் பெங்களூரு நகரில், குண்டும் குழியுமான சாலைகளுக்கு எதிராக மக்கள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில், மேற்கு பெங்களூரு பீன்யாவிற்கு அருகிலுள்ள ருத்ரப்பா லேஅவுட் பகுதியில் வசிக்கும் தனஞ்சய் பண்டார்கர் என்ற பொறியாளரும் இளம் தொழிலதிபரும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முற்றிலும் வித்தியாசமான ஒரு வழியைக் கையாண்டுள்ளார். தனது பகுதியில் உள்ள சீரற்ற மற்றும் தூசி நிறைந்த சாலையில் ஓடியபடியே வீடியோ பதிவு செய்து அவர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ருத்ரப்பா லேஅவுட் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இங்கு 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த லேஅவுட்டில் உள்ள மொத்தம் 1.7 கிலோமீட்டர் நீளச் சாலையில், தொடக்கத்தில் உள்ள 200 மீட்டர் மட்டுமே தார்ச் சாலையாக உள்ளது. மீதமுள்ள 1.5 கிலோமீட்டர் தூரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கற்களும் தூசியும் நிறைந்து மிக மோசமாகக் காணப்படுகிறது. காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்ததும் தார்ச் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால், குடிநீர் இணைப்பு வழங்கி ஒரு வருடம் கடந்தும் சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை.
ஆன்லைனில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனஞ்சய் தனது அன்றாட ‘ஜாக்கிங்’ பயிற்சியையே போராட்டமாக மாற்றினார். கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா மற்றும் யஷ்வந்த்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. சோமசேகர் ஆகியோரின் கவனத்திற்குப் பிரச்சினையைக் கொண்டு செல்லவே இந்த வீடியோவை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். சாதாரணமாக நின்று புகாரளித்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதால் இந்த ஓட்டப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், உடனடியாக சாலை சீரமைக்கப்படாவிட்டால், அடுத்ததாக இதே மோசமான சாலையில் ‘ஹேண்ட்ஸ்டாண்ட்’ செய்து வீடியோ வெளியிட்டுப் போராடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
