LATEST NEWS
“நோ சொன்ன பெண்… உடனே சம்பள சீட்டை அனுப்பிய வாலிபர்..! அதன் பின் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்..!!”
சமூக வலைத்தளமான ரெடிட்டில் இளம் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் ஒருவர், தங்களுக்குள் அறிமுகமாகி வெறும் நான்கு நாட்களேயான நிலையில், அவரிடம் திருமண முன்மொழிவை வைத்துள்ளார். அந்தப் பெண் தான் இன்னும் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டிருப்பதாலும், தனது எதிர்காலத் திட்டங்கள் வேறாக இருப்பதாலும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெண்ணின் மறுப்புக்கு அவரது பொருளாதாரக் குடும்பச் சூழல்தான் காரணம் என்று தவறாகப் புரிந்துகொண்ட அந்த வாலிபர், தான் எவ்வளவு வசதியாக வாழ்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காகத் தனது சம்பளச் சீட்டு மற்றும் சொத்து ஆவணங்களை அந்தப் பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். தான் ஒரு மென்பொருள் பொறியாளர் என்றும், எதிர்காலத்தில் தனது தந்தையின் மரச்சாமான்கள் தொழிலைக் கவனித்துக் கொள்ளப் போவதாகவும் கூறி, அவளுக்கு ஒரு வசதியான வாழ்க்கையையும், ஆண்டுக்கு மூன்று முறை வெளிநாட்டுப் பயணங்களையும் தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், அந்தப் பெண் வெளிநாடு சென்று ஆராய்ச்சி செய்ய விரும்புவதாகவும், இந்தியாவில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தனக்கு கவலையளிப்பதாகவும் கூறி அவரது பொருளாதார வசதிகளை நிராகரித்துள்ளார்.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த செய்திக்கு நெட்டிசன்கள் தங்களது கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், “இளவாலிபர் திருமணப் பேச்சுவார்த்தையை ஏதோ வேலைக்கான நேர்காணல் போல மாற்றிவிட்டார்” என்று நகைச்சுவையாகக் கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலரோ, திருமணம் போன்ற பெரிய முடிவுகளை வெறும் பணத்தை மட்டும் வைத்து எடுக்க முடியாது என்றும், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் இருவரின் சித்தாந்தம், எதிர்காலக் கனவுகள் மற்றும் பரஸ்பரப் புரிதல் ஆகியவைதான் மிக முக்கியம் என்றும் அந்தப் பெண்ணின் முடிவை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.
