LATEST NEWS
“இது அரசுக்கான எச்சரிக்கை மணி..!” 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் மாணவர்கள் குறைவு..! தமிழக அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி குறித்து… அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை..!!
மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 2.07 லட்சம் குறைந்துள்ளது. கடந்த 2024-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, 2025-26ஆம் ஆண்டில் 43.03 லட்சமாகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த 2022-23ஆம் ஆண்டின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 7.39 லட்சம் வரை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகால நீண்ட காலப் போக்கை எடுத்துக்கொண்டால், 2015-16ஆம் ஆண்டில் 75.52 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 43.03 லட்சமாகக் குறைந்து, சுமார் 43.02% சரிவைக் கண்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த ஓராண்டில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.77 லட்சம் அதிகரித்து, ஒட்டுமொத்தமாக 11 ஆண்டுகளில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை 36.56 லட்சத்திலிருந்து 62.03 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சியே தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்திருப்பது மிகுந்த கவலையளிப்பதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் இந்த அளவுக்கு மாணவர் சேர்க்கை குறைந்து வருவதற்கு, அங்குப் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதுமே முதன்மைக் காரணங்கள் ஆகும். தற்போது அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்த மோசமான நிலையைத் தமிழ்நாடு அரசு ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, உடனடியாக அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
