LATEST NEWS
BREAKING: ஸ்ரீவைகுண்டம் MLA சரவணனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ வி.ஜி.சரவணனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவருக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தான் மக்கள் பணியாற்றுவதை முடக்கும் நோக்கில், அண்மையில் தனது காரின் மீது லாரியை மோதி விபத்தை ஏற்படுத்த மர்ம நபர்கள் முயன்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் . இதுகுறித்து உளவுத்துறையினர் நேரில் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை இந்த அதிரடிப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
தாம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைவதற்காக ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை குதிரை பேரம் பேசப்பட்டதாகவும், அதற்குப் பணிய மறுத்ததால் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் ஆடியோ ஆதாரத்துடன் எம்.எல்.ஏ சரவணன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார் . ஏரல் வாரச் சந்தை மூடப்பட்ட விவகாரத்தில், தவெக எம்.எல்.ஏ-விற்கு எதிராக திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து கூட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இந்தத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
