LATEST NEWS
இனி மருத்துவமனையில் கால்கடுக்க காத்திருக்க தேவையில்லை… வாட்ஸ்அப்பிலேயே OP டோக்கன் வாங்கலாம்… இன்று முதல் அறிமுகமாகிறது ‘நலம்AI’… தமிழக அரசு அசத்தல்..!!
பொதுமக்களுக்கு அரசின் மருத்துவச் சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில், உரையாடலுடன் வடிவமைக்கப்பட்ட “நலம்AI” என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையை இன்று மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ் தொடங்கி வைக்கிறார்.
இச்சேவை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மக்கள் தங்களின் மருத்துவத் தேவைகளை வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெறும் நோக்கில் இந்தத் தொழில்நுட்ப வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் முக்கியப் பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த “நலம்AI” வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களின் ஒருமுறை பதிவு (One-time Registration) மற்றும் வெளிநோயாளி சீட்டுக்கான முன்பதிவு (OP Appointment Booking) ஆகியவற்றைத் தங்களின் மொபைல் போன் மூலமாகவே வீட்டிலிருந்தபடியே மிக எளிதாகச் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.
இச்சேவையானது முதற்கட்டமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் (Department of Respiratory Medicine) சோதனை முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கு முறைப்படி தொடங்கப்பட்ட பின்னர், இதன் செயல்பாடுகளைக் கண்காணித்துத் தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
