CRIME
“வெளியே போனால் கெட்டுப்போய்விடுவான்…” பயத்தில் தந்தை விதித்த அடுக்கடுக்கான தடைகள்…! ஆத்திரத்தில் தந்தையை வெட்டிச் சாய்த்துவிட்டு.. 16 வயது சிறுவன் செய்த திடுக்கிடும் காரியம்..! நொய்டாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட அஜ்னாரா சொசைட்டி பகுதியில், தந்தை மீது இருந்த கடும் ஆத்திரத்தால் 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான். ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ ஸ்டீல் சிட்டியைச் சேர்ந்தவரும், நொய்டாவில் டியூஷன் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவருமான ராஜு சர்மா என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது 16 வயது மகன் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்தான். கொலையைச் செய்த பிறகு, இரத்தக் கறை படிந்த தன் ஆடைகளை மாற்றிவிட்டு, தந்தையின் புகைப்படத்திற்குப் பூமாலை அணிவித்தான். பின்னர் அறையை வெளியிலிருந்து பூட்டிவிட்டு, தந்தையின் மொபைல் போன் மற்றும் பையை எடுத்துக்கொண்டு செக்டார்-34 மெட்ரோ நிலையத்திற்குச் சென்று, வரும் மெட்ரோ ரயிலின் முன் குதித்துத் தற்கொலை செய்துகொண்டான்.
மெட்ரோ இரயில் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் பையை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு மொபைல் போனும் அறையின் சாவியும் இருந்தன. அந்த போன் மூலமாகப் போலிஸார் சிறுவனின் தாயைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்த தாயும் உறவினர்களும் போலிஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாவியைக் கொண்டு பூட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையின் சுவர்களில் இரத்தம் சிந்திக் கிடைக்க, ராஜு சர்மா இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்துத் தடயவியல் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மத்திய மண்டல டிசிபி ஷைலேந்திர சிங் வெளியிட்ட தகவலின்படி, ராஜு சர்மா மிகவும் கோபக்காரராகவும், தனது மகன் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பவராகவும் இருந்துள்ளார். மகன் தவறான சகவாசத்தில் விழுந்துவிடுவான் என்ற பயத்தில் அவரை வீட்டை விட்டு வெளியேறக்கூட அனுமதிப்பதில்லை. மேலும், 11-ஆம் வகுப்பிற்குப் பிறகு மகனின் படிப்பையும் அவர் நிறுத்தியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவனுக்கும் தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தந்தையின் இந்த அதிகப்படியான கட்டுப்பாடுகளும் மன அழுத்தமுமே, இறுதியில் தந்தையைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் சிறுவனைத் தள்ளியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
