LATEST NEWS
அடப்பாவமே..! தந்தையைக் கொன்று 18 வயது இளைஞன் செய்த பகீர் சம்பவம்..! இரட்டைக் கொடூர மரணங்களால் உறைந்துபோன பகுதி..! பின்னணி என்ன..?!
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா செக்டார் 52 பகுதியில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 55 வயதான தனது தந்தையை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நேரத்தில் குடும்பத்தினர் வீட்டிலேயே இருந்துள்ளனர். தந்தையை கொலை செய்த பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அந்த இளைஞர், நேராக நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று, அங்கு வந்த மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். குறுகிய நேர இடைவெளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், வீட்டில் உயிரிழந்த தந்தையின் உடலையும், மெட்ரோ பாதையில் உயிரிழந்த இளைஞரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் குடும்பத் தகராறு இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், ஒரு மகனே தனது தந்தையை கொலை செய்யும் அளவுக்குத் தீவிரமான முடிவுக்குத் தூண்டியது என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இது தொடர்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்திற்கு முன்பும் பின்னரும் அந்த இளைஞர் சென்ற இடங்களைக் கண்டறிவதற்காக வீட்டைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் மெட்ரோ நிலையத்துக்குச் சென்ற பாதையில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை போலீசார் முக்கிய ஆதாரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அவரது செல்போன் பதிவுகளும் அதிகாரிகளால் ஆராயப்பட்டு வருகிறது. உடற்கூறாய்வு அறிக்கைகள், சிசிடிவி பதிவுகள் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட பின்னரே, இந்த துயர சம்பவத்தின் உண்மையான பின்னணி முழுமையாக வெளிச்சத்துக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
